கீழடி மேன்மை பாடுவோம்
மூவாயிரம் ஆண்டுக்கு முந்தியகுடியில்
பெண்மையைப் போற்றிடும் தமிழ்க்குடியில்
புள்ளிமானே கல்விமானாய் துள்ளித்திரிந்த
வள்ளிக்குறத்தியின் மெல்லினக்காதல்
நீள்சதுரமாய் செங்கலடுக்கி
ஆள்உயரமாய் சுவரெடுத்து
கால்பதித்திடக் கல்த்தரையும்
கோலோச்சிட நான்மாடமும்
அரியணைக்கு அரண்மனையும்
பஞ்சணைக்கு அந்தப்புரமும்
மழைநீர் படிந்திட வட்டக்கால்வாயும்
கழிவுநீர் வடிந்திட மூடியவாய்காலும்
கரைபுரண்டோடும் வைகையில்
திரைகடந்துவந்து வணிகம்செய்து
மேலைநாட்டு நாணயமும்
வேலைப்பாடுடை பொன்னும்மணியும் பரிசளிக்க
சாதிமத பேதமின்றி
மேதினியாளும் ஆதனை
மாலைசூடி மணந்திடவே
ஓலையனுப்பினாள் மண்பானை ஓட்டில்
உற்றாரும் ஊராரும்
பெற்றோரும் பெருமக்களும்
வரிசையோடு பரிசம்போட விரைந்திட
உதிரனும் திசனும் கொம்பூதி வரவேற்க
ஈழம் தாண்டிவந்து
ஞாலம் அழிக்கவந்த ஆழிப்பேரலை
தமிழகத்தை தனக்குள்ளே விழுங்கிட
தமிழினமே சமாதியானது தமிழியோடு
தொல்பொருள் கண்டெடுத்தக் கல்லோவியமே
தொல்காப்பியம் ஈன்றெடுத்தத் தமிழ்க்கீழடி
அழிந்துபோன வரலாற்றின் நாகரீகச்சின்னமே
அழியாதகாதலின் சரித்திரக்காவியம்...!!!
இருட்டில் ஏது நிழல்
மதமும் சாதியும்
சடங்குச் சன்னலைச் சாத்திவிட
கதவில்லா வாசலொன்று
மூடிக்கிடக்கிறது
முறிந்துபோன உறவுகளின்
முன் நெற்றி ரேகைகள் முடிச்சாய்
பின்னிக் கிடக்கிறது
வாசம் செய்தவர்
வனதேசம் போய்விட
விட்டுச்சென்ற மூச்சுக்காற்று
திரைச்சீலையில் ஊஞ்சலாடி
திரும்ப வராத தினங்களை
தீர்த்து வைக்க முயன்று தோற்கிறது
அக்னியின் சாட்சியாக
அடியெடுத்து வைத்தவர்
குத்துவிளக்கு ஏற்றிட
சுவர்களில் படிந்த வெளிச்சம்
படியாத ஒட்டடையாய்
குடியேறிய நினைவுகளைச்
சுமந்து நிற்கிறது
கொஞ்சிச் சிரித்து
நெஞ்சில் சுமந்து
கட்டில் கால்கள் வரைந்த
காலடி ஓவியங்கள்
கீழடியில் கண்டெடுத்த
கல்வெட்டாய் கண்முன் விரிகிறது
கூடி வாழ்ந்து ஓடித் திரிந்த
கால்தடங்கள் வீடெங்கும்
அழியாத கோலங்களாய்
அழுக்கின் அடியில் படிந்து கிடக்கிறது
புதர்மண்டிக் கிடக்கிறது
புனிதமாய் பூசித்த
பூஜையறையும் தூசுபடிந்து
பதித்துச்சென்ற தடங்கள் வடுக்களாகி
ஆறிப்போன காயத்திலும்
ஆறாத வலியினை அமைதியாய்ச் சுமக்கிறது
வெறிநாய்களும் ஓநாய்களும்
வேலி தாண்டி வேதனை கூட்ட
இருப்பைத் துறந்து
இடிந்து விழ நினைக்க
மடிந்து மாயாதே
துணிந்து நில்
இனி வசப்படும் பார்..
அதட்டி அடக்கியது ஆழ்மனம்
இல்லையென அறிந்தும்
இருட்டில் நிழல்தேடி அலைகிறது
இற்றுப்போன இதயம்
அகல்விளக்கு ஏற்ற
அக்னிச் சந்தையில் காத்திருக்கிறது
ஆளின்றி அடக்கமாகிப் போன
இல்லமொன்று..!!!!
அன்பும் மனிதமும்
நியூயார்க் நகரம்..
மேக கூட்டமும் திணறும்
வான்வழியை மறைத்து நிற்கும்
இதன் கட்டிடங்களின் முனைகண்டு
உலகின் உச்சத்தில் அமர்ந்து
அழகை ரசிக்க வரும் மக்கள் ஒருபுறம்
கற்ற அறிவை விற்றுப் பிழைக்க வரும்
சான்றோர் கூட்டம் மறுபுறம்
உலகின் உயிர்மூச்சைப் பிடித்து
சுவாசச் சங்கிலியில் பிணைத்து
அடுக்குமாடிப் பெட்டிக்குள்
அடைத்துவைத்த அற்புதமது
சிறகின்றி பறந்துவந்தச் சீன
சிறுகிருமியொன்று நுழைந்து
நகரத்தை நரகமாக்கிவிட்டு
நகர்ந்து போனது அடுத்த நகரம் தேடி
செல்வமும் செழிப்பும் உள்ளவர்
சொல்லாமல் செல்லுக்குள் ஒளிந்துகொள்ள
செல்லவழியில்லாதவர் செத்துப்
பிணங்களாய் குவிந்து போக
அடைத்து வைக்கவோ பெட்டியில்லாமல்
அடக்கம் செய்யவோ இடமில்லாமல்
சடலங்களே சவக்கிடங்கு வாசலில்
சமாதியாக வரிசையில் கிடந்த அவலமும்
அமைதியாக அரங்கேறியது அங்கே
கருப்புப்பையில் அடைத்து
சரக்கு வாகனத்தில் குவித்து
சாலையோரத்தில் நிறுத்திவிட்டு
காணாமல் போயினர் வாகனமோட்டிகள்
உறவுகளும் உடைமைகளும் இருந்தும்
சாலையோரத்தில் அனாதைப் பிணமாய்
அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசிட
அருகிலுள்ளோர் அச்சத்தில் உறைந்து
சவக்கிடங்கு ஊழியரிடம் முறையிட
மனிதநேயம் கொண்ட அவன்
தொற்றுமெனத் தெரிந்தும்
பிணக்குவியலை பற்றியிழுக்க
சுழன்று விழுந்தது சடலமொன்று
சுற்றியிருந்த பைகிழிந்து
குப்புறக்கிடந்த பெண்பிணத்தை
கைகளால் திருப்பிட
பெற்றவள் முகம்கண்டான்
மூர்ச்சையாகி விழுந்தான்
அன்பு கலந்த மனிதம் அங்கே அழுதிட..!!!