சாகித்திய அகடமி விருது பெற்ற பதினைந்து சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல்.
மனிதர்கள் கடைசிவரை இன்னொரு மனிதரிடம் முற்றிலும் தன்னை வாசித்து காட்டி விடுவது இல்லை. ஒளித்து வைக்க வேண்டும் என்று அல்ல, வாசிக்க அவசியமற்றவை என்று தீர்மானிக்கப்பட்ட பக்கங்கள் அவை. அந்த அற்புதமான பக்கங்களை தன்னுடைய வயோதிகத்தில் அசை போடுகின்றனர் இந்த கதைகளில் வரும் சில கதைமாந்தர்கள். மற்றும் சிலரின் ரகசிய பக்கங்கள் அவர்களின் இறப்புக்குப் பிறகு மற்றவர்களால் வாசிக்கப்படுகின்றன இந்த கதைகளில்.
ஒவ்வொரு கதையும் தென்றலை போல மென்மையாக நம்மை வருடுகிறது. நிறைய கவித்துவமான வரிகள் வாழ்க்கையில் நாம்தேவையற்றது என்று கடந்து வந்த தருணங்களை உயர்வானவையாக காட்டுகிறது.
எழுத்தாளரின் விவரினைகள் மிக நுட்பமாகவும் அழகாகவும் இருக்கின்றது.
ஒரு சிறு இசை கதை பதினாறு வயதில் திருமணம் முடித்து சிறிது நாட்களிலேயே கணவனை இழந்த மூக்கம்மா ஆச்சியை பற்றியது. தன் ஒன்றுவிட்ட தங்கையின் வீட்டுக்கு அடிக்கடி வரும் ஆச்சி, ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் அனைவரின் கையை பிடித்து பேசும் பழக்கமுடையவள். அவள் இறந்த பிறகு ஆச்சியின் பெட்டியை திறப்பவர்களுக்கு ஒரு சிறு இசையாக ஒலிக்க தொடங்குகிறது அவளுடைய உணர்வுகள்.
ஒரு தாமரை பூ , ஒரு குளம் கதையில் மனைவி இறந்த பிறகு மகனின் அரவணைப்பில் வாழும் அவர், ஜிப்பாவோ, செருப்போ தனியாக அணிய இயலாத வயோதிகத்தில் இருக்கிறார்.
முதன்முதல் பறவை வெளிவந்த முட்டையோட்டின் சிதறல்களை மண்ணிலிருந்து பொறுக்கியெடுத்து மீண்டும் அது தன் முட்டைக்குள் புகுந்துவிட துடிக்கின்ற ஒற்றை பிரயாசையை போல்
தன் கை விரல்களை பிடித்துக்கொண்டு இறந்த மனைவியின் இறப்பை நினைவு கூறுவது
மனதில் கனமான இசையாக ஒலிக்க செய்கிறது.
கணவன் மனைவி உறவு புரிந்து கொள்ளப்படாமலே தன் முதுமையில் முகத்தில் சிரிப்பே இல்லாமல் பொழுது போவதற்காக சதுரங்கம் விளையாடும் தாயம்மா அத்தை, தண்டவாளங்களை தாண்டுகிற காந்தி ஆசிரியை, பல ஆண்டு தாம்பத்தியதிற்கு பிறகு கணவனின் விவாகரத்துக்கு இசையும் ஜானகி என்று பெண் கதைமாந்தர்களின் உணர்வுகள் கவிதையாகி நம்முடம் பேசுகிறது.
எழுபது வயதில் மனைவியை இழந்த கணவனும், கணவனை இழந்த மனைவியும்
சிறகிலிருந்து பிரிந்த இறகாக வாழ்வதும்,
நம்மை விட்டு பிரிந்தவர்களின் வாசனையை முகர்ந்தே அவர்களை தன்னுடன் வாழ செய்ய பிரயத்தனப்படுவதும் மனதுக்குள் ஒரு இனம் புரியாத இசையை இசைக்கிறது.
ஒவ்வொரு உறவை பற்றி விமர்சிப்பதற்கும் கொண்டாடுவதற்கும் எண்ணற்ற விடயங்கள் இருக்கின்றன. அந்த ஒவ்வொரு தருணங்களையும் ஒரு சிறு இசையாக வெளிப்படுத்தியிருக்கிறது இந்நூல்.
FEED BACK
No Feedback Arrived Yet! Be the First one